ஓம் சிவோஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம்,
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம்,

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா!

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
சூரனா ஜெகத்க் காரனா சத்ய தேவ தேவப் ப்ரியா.
வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா

சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா
சூலபாண்டி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா

யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா!

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம்,
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம்,


காலத் த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூலத் திரிசூல காத்ரம்.
சத்யப் பிரவாக நித்யப் பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்ச்ராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

சத்ஷித் ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம், ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம், பஜேஹம்,

ஜெய் ஹோ!

இயல்பாக தான் விடிந்தது நேற்றும், அப்பா, எப்போதும் போல கையில் காபியுடன் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அம்மா காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்கள். என்னடா இவ்வளோ சீக்கிரம் முழிசிட்ட? தூங்கலையா? நைட்டு லேட்டதான வந்த, பேசாம தூங்க வேண்டியதுதானே என்கிற தினசரி அர்ச்சனைகளோடு வெகு சாதாரணமாகத்தான் விடிந்தது நேற்றும். இரண்டாவது ஆட்டம் சினிமாவிற்கு சென்று சென்ற வந்த களைப்பிலும் ஆறுமணிக்கு டிவி முன்பாக அமர்ந்து விட்டேன். ஆஸ்கார் விருது வழங்கும் விழா.

ஒவ்வொரு விருதாக வழங்கப்பட்டு வருகிறது சிறந்த ஒலி கலவைக்கான (Sound Mixing) இறுதிகட்ட போட்டியாளர்களில் ஒருவர் ரசூல் பூக்குட்டி (இந்த மலையாளிகள்தான் எவ்வளவு அழகான பெயர்களை சூட்டிகொள்கிறார்கள் - நன்றி எஸ்.ராமகிருஷ்ணன்). மற்றபோட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் போது எனக்கு சற்று பயம் வந்தது உண்மை. ஏனெனில் WALL-E படத்திற்கான ஒலிசேர்க்கை உண்மையிலேயே மிகவும் அமைந்திருந்தது. அந்த குட்டி ரோபோட்டின்ஒவ்வொரு அசைவுகளுக்கும் பிரமாதமாக ஒலியமைத்திருப்பார்கள். அதே போல THE DARK KNIGHT படத்திலும் பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருப்பார்கள். என்னை கேட்டால் எனக்கு THE DARK KNIGHT படத்தில் மிகவும் பிடித்த விஷயம் அதன் மிரட்டும் இசைத்தான். அதற்க்கு பிறகுதான் மற்ற அனைத்துமே என்பேன். ஆக இந்த இரண்டு படங்களுமே எங்கள் பூக்குட்டியுடன் போட்டிக்கு நின்று கொண்டிருந்தபோது எனக்கு சற்று பயம் வந்தது உண்மை. ஆனால் யார் ஜெயித்தார்கள் என்று சொன்னபோது என்னால் அந்த நிமிடத்தை நம்ப முடியவில்லை. மேடைக்கு வந்து மூச்சிரைக்க நின்று பிறகு ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்ணில் நீரோடு ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அங்கே ஆயிரம் ஆயிரம் வசதிகளும் புது புது தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. அவர்கள் இதைசெய்வதை விட இந்த வசதிகள் இல்லாமலேயே இதை சாதித்து காட்டிய எங்கள் ரசூல் பூக்குட்டி அவர்களே, இத்துணை வருட இந்தியகன்வை மெய்ப்பித்த உனக்கல்லவா நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நன்றி ரசூல் பூக்குட்டி அவர்களே. உங்கள் பயணம் தொடரட்டும்.



ஒருசமயம் நண்பர் சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது "ஆஸ்கார் விருது, தற்சமயம் கமர்ஷியல் ஆகிவிட்டது. சின்ன ஆஸ்கார் என்கிற கோல்டன் குலோப் விருதுதான் தற்ச்சமயம் மிகவும் கௌரவமான விருதாக கருதப்படுகிறது" என்று சொன்னார். கோல்டன் குலோப் விருது மிகவும் பெருமைக்குரிய விசயம்தான் ஆனால் ஆஸ்கார் என்பது கமர்ஷியல் ஆகிவிட்டது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதுபற்றி நான் எதுவும் விவாதம் செய்யவில்லை. இதை ஏதற்காக சொல்கிறேன் என்றால், நேற்று ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு துறையின் இறுதி பட்டியலுக்கு தெரிவு செய்யபட்டிருந்த படங்கள் நான் நினைத்தது சரிதான் என்று ஊர்ஜிதப்படுத்தியது. தி குயுரியஷ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன், மில்க், தி ரீடர் மற்றும் ப்ரோச்ட்/நிக்ஸ்ன் இதில் பிரோஷ்ட் /நிக்ஸ்ன் தவிர மாற்ற படங்களை பார்த்துவிட்டேன். நியாயமான சிபாரிசுகள்தான். நிச்சயம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியுள்ள படங்கள்தான்.



ஏ. ஆர் . ரஹ்மான் - ஜீனியஸ், மொசார்ட் ஆப் மெட்ராஸ், இசைப்புயல், லிட்டில் மாஸ்டர் இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லுங்க. முதலில் ரஹ்மான் ஒரு நல்ல மனிதர். அமைதியானவர். நிரம்ப தன்னடக்கம் கொண்டவர்,எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு, வெற்றியடைந்தவர்கள் பற்றற்று இருக்கிறார்களா? அல்லது பற்றற்றிருப்பவர்களை வெற்றி வந்தடைகிறதா என்று. விருது வாங்கியவுடன் அவர் பேசியவிதம் நிச்சயம் அவரின் இசை பிடிக்காதவரிகளிடமும் அவரை கொண்டு சேர்த்திருக்கும். i'm nothing but i have mother. "நான் ஒன்றும் இல்லை எனக்கு அம்மா இல்லாவிட்டால்" எவ்வளவு அழகான நன்றியுரை. நான் கடவுள் படம் பார்த்ததற்கு பிறகு ரஹ்மான் பேச்சை கேட்டவுடன், நான் எந்த குறையும் இல்லாமல் பிறந்ததையும் ஒரு நல்ல பெற்றோர் அமைந்ததையும் மீண்டும் நினைத்துபார்கிறேன். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்விதமாக நூறு கோடி இந்தியர்களின் ஆஸ்கர் கனவை மெய்பித்த ரஹ்மான் அழகாக தமிழில் பேசியது, அப்படியே சிலிர்க்க வைத்து விட்டது. எவாளவு ஆசை பட்டிருப்போம், எவ்வளவு பெரிய மேடை, திரை உலகின் அனைத்து ஜாம்பவான்களும் அமர்ந்திருக்கும் மேடை அங்கே தமிழை கேட்டபது என்பது எவ்வளவு அறிய விஷயம். அதை அழகாக அமைதியாக செய்து காட்டியிருக்கும் ரஹ்மான். அற்புதம்.


நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை, மாறாக என்னால் முடிந்தவரை நல்ல இசையை கொடுக்குகவே முயற்சி செய்கிறேன். என்கிற ரஹ்மான், எனது இந்த வெற்றியை இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்கிற ரசூல் பூக்குட்டி, ஜெய் ஹோ பாடலை எழுதி ஆஸ்கார் பெற்றிருக்கும் கவிஞர் குல்சார், என ஆஸ்கார் விருதுபட்டியலில் இந்திய கணக்கை துவங்கி வைத்திருக்கும் இவர்கள் மூவருக்கும் நாம் அவசியம் நமது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்.


கொண்டாட்டம் என்பதை நாம் பெரும்பாலும் மறந்தே போய்விட்டோம். .
நாம் நிச்சயம் கொண்டாட வேண்டிய நல்ல தருணம் இது. நாம் எதை எதையோ கொண்டாட்டம் என்கிற பெயரில் செய்துகொண்டிருக்கும்போது இது நாம் நிச்சயம் கொண்டாட வேண்டிய நல்ல தருணம். 81 வருட ஆஸ்கார் சரித்திரத்தில் அந்த மேடையில் ஒலித்த முதல் தமில்குரலுக்காக கொண்டாடுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று விருதுகளை ஒரு நேரத்தில் பெற்று சினிமாவில் இந்தியாவின் ஆளுமையை நிருபித்ததற்காக கொண்டாடுங்கள். ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

இன்னும் நிறைய

இன்றோடு சரியாக ஒரு வருடம் ஆகிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. உருப்படியாய் எதுவும் எழுதவில்லை, மற்றவர்களுக்கு உபயோகமாகவும் எதுவும் எழுதவில்லை. ஆனாலும் எதோ எழுதிகொண்டேதான் இருந்திருக்கிறேன். நான் எழுத ஆரம்பித்தபோது, என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வலைப்பூ முகவரியை அனுப்பியிருந்தேன். பலர் பாராட்டியதோடு தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தனர் சிலர் ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையா? என்று உண்மையை கண்டுபிடித்து சொல்லியிருந்தார்கள். எனக்கு தெரிந்து முதல் நாள் ஊக்குவித்தவர்கள் கூட இன்று என்னுடைய வலைப்பூவை படிப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் நான் ஏதோ எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

புகை பிடிப்பதைபோல நான் எழுவதற்கும் எதுவும் காரணமில்லை. ஆனால் எழுத ஆரம்பிக்கும்போது நிறைய யோசித்தேன், கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக நாட்குறிப்பு எழுதிவருகிறேன், அதைப்போலவே தினசரி நாட்குறிப்பு போல இல்லாமல் சில முக்கியமான நினைவுகளை பதிந்து வைத்துக்கொள்ள எழுதினேன். பிறகு சில சமூக பிரச்சனைகள் குறித்த விவாதங்களை, பிடித்த சில உலக திரைப்படங்களை பற்றி, புத்தகங்கள் பற்றி, இசை பற்றி என எனக்கு பிடித்த சற்று பரிட்சயம் உள்ள துறைகளில் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ள எழுதினேன்.


எழுத எதுவும் இல்லாமல் என்றைக்குமே இருந்தது இல்லை. இன்று இதை எழுதிவிட வேண்டும் என்று நினைத்த எத்தனையோ இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நிறைய எழுத வேண்டும் நண்பன் ரங்கராஜனை பற்றி, எங்கள் ஊரின் ஆறாவது புத்தக கண்காட்சியை பற்றி, தொழில் நகரம் என அறியப்பட்ட திருப்பூரின் இன்றைய நிலை பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். ஆனால் முன்பிருந்த முனைப்பு வேலைப்பளு காரணமாக சற்று குறைந்திப்பது நிஜம். லாபம் இல்லையென்றாலும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கிறது. பிறருக்காக எழுதும் பக்குவம் இன்னும் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். வெகு விரைவில் பக்குவமான பதிவுகளை செய்வேன்.



நான் கடவுள்

நான் கடவுள்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. முதலில் நான் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நினைத்தை சொல்ல முயன்ற தைரியத்திற்காக பாலாவிற்கு, அகராதியில் இசை என்றால் அதற்க்கு இளையராஜா என்றிருந்த பெயரை அடித்து இன்னும் பெரிதாக இளையராஜாவைத் தவிர வேறில்லை என்று எழுதுமளவிற்கு பின்னணி இசையில் தனது அடுத்த இலக்கை தொட்டிருக்கும் இளையராஜாவிற்கு, படத்தில் இருபத்து நிமிடங்களே வந்தாலும் இந்த திரைப் படத்திற்காக தனது மூன்று வருடத்தை, இயக்குனரை நம்பிகொடுத்த ஆர்யா, பூஜா மற்றும் இதர கடவுள்களுக்கும், காசியை இதற்க்கு முன்பு விசுவலாக பார்த்ததில்லை, படம் பார்க்கும் முன்பு எனக்கிருந்த எதிர்பார்ப்புகளில் ஒன்று கேமரா, அதிலும் காசி. என்னுடைய அல்லது எல்லோருடைய கண்களையும் ஏமாற்றாத ஆர்தர் வில்சனின் கேமரா, குறிப்பாக நறுக் தெறிக்கும் பட்டவர்த்தனமான வசனங்களுக்காக ஜெயமோகனுக்கு என அடுக்கிகொண்டே போகலாம்.



முதலில் இளைய ராஜா, படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நம் மனதில் ஒரு அதிர்வை உண்டாக்குகின்ற இசை, ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இளையராஜாவின் இன்னுமொரு எடுத்துக்காட்டு நான் கடவுள். என்னை மிகவும் கவர்ந்த சில இடங்கள், ஆர்யாவை தேடி வரும் தந்தை அவரை அகோரியாக சந்திக்கும் இடம் உரையாடல் தேவையில்லாத அந்த இடத்தில் இளையராஜாவின் இசை பிரவாகம், உட்சத்தை அடைந்து மெதுவாக கீழே இறங்கி முடியும் தருவாயில் தந்தை மயங்கி விழுவது, அருமையான காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை இரண்டும் ஒரு புள்ளியில் இணையும் இடம் இது. அந்த பின்னிரவின் இருட்டில் மிரட்டும் உடுக்கை, போலிஸ் பாதுகாப்பில் ருத்ரன் குளிக்கும்போது தலைகீழாக தவம் செய்யும்போது 100 வயலின்களின் சிம்ம்போனி, இன்னொருமுறை கேட்க (பார்க்க) தூண்டும்.

பிட்சைபாத்திரம் பாடல் அருமையான பாடல் வரிகள், ரம்மியமான இசை, மது பாலகிருஷ்ணாவின் வசீகர குரல் மற்றும் காட்சியமைப்பில் பாடல் மிக அருமை. பிட்சைபாத்திரம் பாடலின் புகழ், ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு பாடலை எழுதி இசையும் அமைத்து வைத்திருந்த இலயராஜாவிற்க்கா அல்லது அந்தபாடல் வேண்டுமென்று கேட்டு பொருத்திகொண்ட பாலாவிற்கா அவர்களுக்கே வெளிச்சம். ஓம் சிவா ஓம் - ருத்ரனின் ருத்ர தாண்டவத்திற்கு ஏற்ற பாடல், ருத்ரன் படத்தில் மட்டும்தான் ஆடவில்லை, நம் ஒவ்வொருவர் மனதிலும் ருத்ரதாண்டவம் ஆடும் படைப்பு. யாருங்க அது, விஜய் பிரகாஷ்? உடுக்கையின் மிரட்டல்களுக்கிடையே அவரின் குரலும் விளையாடுகிறது. திடீரென கீழே இரங்கி பாடுவதாகட்டும், உடனே உச்சஸ்தாயில் பாடுவதாகட்டும் அனுபவித்து பாடியிருக்கிறார். இந்த பாடலின் உயிர் இவரது குரல். அனேகமாக படத்தில் ருத்ரனின் மொத்த வசனமும் இந்த பாடலில் இடம் பெறுகிறது. நான் கடவுள் இந்த திரைப்படத்தின் மற்றுமொரு அடையாளம் இந்த பாடல்.

ஜெயமோகன் அவர்களின் ஏழாவது உலகம் என்ற நாவலின் மையகருவை கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் நான் கடவுள் என்று அறிந்தபோது ஏழாவது உலகம் நாவலின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது, இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கவில்லை. தேவை இந்த நாவலின் அறிமுகம் மற்றும் பதிப்பக விபரம். ஜெயமோகன் அவர்களுக்கு தைரியம் அதிகம் என்பது தெரியும், இந்த படத்தில் அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பாலா - அனேகமாக இவரின் திரைபடங்களில் அடித்தட்டு மக்களை அல்லது விளிம்பு நிலை மனிதர்களை சார்ந்தே இருக்கும் அல்லது இருக்கின்றது என்று ஒரு குற்றச்சாட்டே உள்ளது. என்னை பொறுத்தவரை இதில் எந்த தவறும் இருப்பதை தெரியவில்லை. மேல்தட்டு மக்களை படம் பிடிக்க ஒரு மணிரத்தினமும், கௌதம் வாசுதேவ மேனனும் இருக்கும்போது விளிம்பு நிலை மனிதர்களை படம்பிடிக்க ஒரு பாலா இருந்தே தீரவேண்டும். இவரது அநேக கதாபாத்த்ரங்கள் இவரது உண்மையான படைப்புகள். சீயான், நந்தா, சக்தி, வெட்டியான், ருத்ரன் இவர்களை வேறு எந்த உலக திரைப்படங்களிலும் பார்த்திருக்க முடியாது. ஒவ்வொருவரின் அடிமனதிலும் உறங்கிகிடக்கும் அந்த ஆதிவாசியை, மிருகத்தை கிளர்ச்சியடைய வைத்து எழுப்பிவிடும் இவரது கதை சொல்லலைத்தவிர பாலாவின் படைப்புகளில் எந்த குறையும் எனக்கு தெரியவில்லை. என்னுடைய மொத்த பாராட்டுகளும் அவரின் திரைகதைக்கோ அல்லது இயக்கத்திற்கோ அல்ல, பாலாவின் தைரியத்திற்கு. என்ன நினைத்தாரோ அதை எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக சொன்ன அவரது தைரியத்திற்காக. இன்று பல இயக்குனர்களிடம் இல்லாத அந்த தைரியத்திற்காக, வியாபாரம் என்பதை காரணம் காட்டி பூசப்படும் எந்த சாயமுமின்றி உண்மையான படம் எடுத்த அவரது தைரியத்திற்காக. பாலாவை தவிர இவர்களை யாரும் வெளிகொண்டுவந்திருக்க மாட்டார்கள். ஐம்பத்து பிட்சைகாரர்களையும், சில சடைபிடித்த சாமியார்களையும் வைத்துக்கொண்டு படம் எடுக்க எத்தனை பேர் முன்வருவர். வந்த பாலாவிற்கு என்னுடைய மொத்த பாராட்டுகளும்.


படத்தின் இறுதி காட்சி பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. எவர் எப்படி பொருள் படுவரோ என்று ஒரு படைப்பாளி யோசிக்க முடியாது, முனைவர் மு.ராமசாமி அவர்கள் சொன்னதுபோல ஒருவரை படைப்பாளி என்று ஒத்துக்கொள்ளும் பொழுது, அவர் எந்த ஒரு காட்சியையும் தேவையின்றி வைத்திருக்க மாட்டார் என்பதிலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் இதை எதற்காக செய்திருப்பார் என்று நிச்சயம் யோசிக்க வேண்டும், உண்மையான் ரசிகனாக அது நமது கடமையும் கூட. பாலா - நிச்சயம் ஒரு நல்ல படைப்பாளி. ஆக இறுதி காட்சியின் அர்த்தத்தை நாமாக பொருள்பட வேண்டும். ஒரு நல்ல படைப்பின் அடையாளம் அது ரசிகனை யோசிக்க வைக்ககூடியதாய் இருக்கவேண்டும். அந்த வகையில் நான் கடவுள், நிச்சயம் ஒரு நல்ல படைப்பு.

கடிதம் மூன்று

NIT பாலிடெக்னிக் நண்பர்களே,

உங்களிடம் ஒரு கசப்பான உண்மையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அது நம்முடன், ஆண்டு மெக்கானிகல் துறையில் படித்த நண்பன் ரங்கராஜன், தற்சமயம் மனநிலை பாதிக்கபட்டிருகிறார் என்பதுதான். நாம் அடிக்கடி சந்தித்துகொள்ளும்போது பேசுகிற விஷயம் " பரவாயில்லைடா மச்சான், நம்ம எல்லா நண்பர்களும் நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க" என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி ஒருத்தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்ப்பான் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம். அவன் இரண்டு வருடங்களாக இந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்று நம் யாருக்குமே தெரியாமல் போனது, மிகவும் துரதிஷ்டமானது.

நாங்கள் அவன் பற்றி கடைசியாக அறிந்த செய்தி, அவன் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக மலேசியா சென்றிருக்கிறான் என்பதுதான். அவனுடைய தற்சமய நிலைமை தெரியவரும் வரை, எங்கள் அனைவரின் நினைவும், இன்னமும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பதுதான். அங்கே அவனுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. அவனுடைய இந்த நிலைமைக்கு குடும்ப சிக்கல்கள் ஏதும் காரணமா? அல்லது போதை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு காரணமா? என்பது இன்னமும் சரிவர பிடிபடவில்லை. ஆனால் அவனுடன் மலேசியா சென்ற இன்னொரு நபரும் இதே போன்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான், அவர்களுக்கு அங்கே எதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தற்சமயம் அந்த மற்றொரு நபர் சரியான சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார் என்பதை அவரை சந்தித்து பேசி தெரிந்துகொண்டோம். இதில் சொன்ன சில விஷயங்கள் கூட அவர்களின் உரையாடல்களில் பகிர்ந்துகொள்ள பட்டவைதான்.

நண்பரின் குடும்பத்தில் அவனுக்கு சிகிச்சை செய்யும் அளவிற்கு பொருளாதார நிலைமை இல்லை மற்றும் நண்பரின் ஒத்துழைப்பு இல்லாததாலும் இதுவரை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கின்றனர். இப்பொழுது கல்லூரி நண்பர்கள் முன்வந்து அவரது சிகிச்சைக்கு செலவு செய்ய முற்ப்பட்டது அவர்களுக்கு மிக்கவும்மகிழ்ச்சி.

அவனுடைய மருத்துவ சிகிச்சைக்கு தேவையான எல்லா ஏற்ப்பாடுகளையும் செய்தாகி விட்டடது இப்போதைய தேவை கொஞ்சம் பணம். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கான காலம் மூன்று மாதங்கள். ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் வீதம், மூன்று மாதங்களுக்கு ரூ.45,000.00 - மும் பதிவுதொகை ரூ.10,000.00-மும் உடனடியாக தேவை படுகிறது. மொத்தமாக ரூ. 65,000.00 முதல் ரூ.75,000.00 வரை செலவுபிடிக்கும் என்பது தெரிகிறது. முதற்கட்டமாக ரூ. 25,000.00 சேகரிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள தொகையை வரும் பிப்ரவரி இறுதிக்குள் சேகரிக்கவேண்டும்.

எனவே தங்களால் முடிந்தவரை பொருளுதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். நண்பன் என்ற உரிமையில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்ததற்காக மன்னிக்கவும். எது எப்படியோ அவனுக்கு தேவை நல்ல உறக்கமும், உணவும், சிகிச்சையும் அதை இப்போதைக்கு கொடுப்போம் பிறகு என்ன தேவையோ அதையும் கொடுக்க முயற்சி செய்வோம். நண்பா! நீ விரைவில் குணமடைய எங்கள் அனைவரின் வாழ்த்துகளும் பிராத்தனைகளையும் உரித்தாக்குகிறோம். விரைவில் உன்னையும் எங்களோடு சக மனிதராக சமுதாயமா அடையாளம் காண வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் விருப்பம். பிராத்திக்கும் உதடுகளைவிட சேவை செய்யும் கரங்களே சிறந்தது, இதை உண்மையாக்க உங்கள் அனைவரின் கரங்களும் வேண்டும்.

நண்பர்கள்,

NIT பாலிடெக்னிக்

கருமத்தம்பட்டி.