
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் விழித்திருப்பீர்கள்? அதில் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருப்பீர்கள் அல்லது கேட்டுக்கொண்டிருப்பீர்கள்? உங்களுக்கு உரையாடல் பிடிக்குமா? உங்கள் வாழ்வின் மிக நீண்ட உரையாடல் எவ்வளவு நேரம் நடந்திருக்கும்? அது யாருடனாவது இருந்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு காதல் பிடிக்குமா? காதலர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உடையவரா?
மேற்சொன்ன கேள்விகளுக்கு உங்களுடைய பதில்கள் முறையே 12லிருந்து 15 மணி நேரம், 3 மணி நேரத்திற்குமேல், ஆம் பிடிக்கும், 6 மணி நேரத்திற்கு மேல், ஆம் பிடிக்கும், நிச்சயம். இப்படிபட்டதாக இருந்தால் உங்களுக்கென்றே ஒரு படம். இதோ “BEFORE SUNRISE” மற்றும் “BEFORE SUNSET”. இது, ஒரு முன்னறிமுகமில்லாத ஒரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை சொல்லும் கதை. அதுவும் வெகுவாக பழக்கமில்லதவர்களுடனான முதல் சந்திப்பில் நடக்கின்ற ஒரு நீண்ட உரையாடல். படம் முழுக்கவும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் (அவர்களின் உதடுகள், இணைந்திருக்கும் சில நிமிடங்களைத் தவிர).
படம் நெடுக அவர்களின் பேச்சுகளின் ஊடாகவே அவர்களின் விருப்பு வெறுப்புகள் மற்றும் சுக துக்கங்களை சொல்லியிருப்பர்கள். ஐரோப்பாவிலிருந்து மாண்ட்ரிட் நகரை நோக்கி செல்லும் ஒரு ரயிலில் ஜன்னல் ஓரமாய் புத்தகம் படித்துகொண்டிருக்கிறாள், செலின். அவளின் அருகில் உள்ள ஒரு நடுவயது தம்பதிகளுக்குள்ளான சண்டை, அதன் கூச்சலான பேச்சுக்கள், அவளின் படிப்பை இடையூறாக்கவே, அந்த பெட்டியின் கடைசி பகுதிக்கு வந்து அமர்கிறாள். எதிரில் ஜேசி. அவனும் ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறான். அவள் வந்து அமரும் அந்த நேரம் இருவரின் கண்களும் வெகு எதேட்சையாக சந்தித்து விளகுகிறது.
அந்த தம்பதிகள் ஏதோ சத்தமாக பேசிக்கொண்டே அவர்களை கடந்து செல்கின்றனர், இருவரும் அவர்கள் கண்களிலிருந்து மறையும்வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, பின் திரும்பி கிண்டல் தொணிக்க சிறிய புன்முறுவலை பறிமாரிக்கொள்ள, அந்த தம்பதிகள் மீண்டும் அதே வேகத்தில் கத்திகொண்டு கடந்து செல்கின்றனர். இவர்கள் இருவரிடமிருந்தும் மீண்டும் அதே சம்பாஷணைகள். ஆனால் அந்த புன்னகையில் இப்போது நட்பு பூத்திருக்கிறது.
எல்லா ஆண்களையும்போல இங்கேயும் ஜெசியே ஆரம்பிக்கிறான். “என்னதான் பிரச்சனை, அவங்களுக்கு” என்று தொடர்ந்து பேசும் அவள் ”அவர்களின் தொல்லை தாங்காமல்தான் நான் இங்கே வந்தேன்” என்று சொல்ல அவர்களின் உரையாடல் தொடர்கிறது. என்ன புத்தகம் படிக்கிறார்கள்? எங்கிருந்து எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதுவரை தொடரும் அவர்களின் உரையாடலை அந்த நடுவயது தம்பதிகளின் உரத்த பேச்சுகள், தடுக்க. நாம் கேண்டீன் பெட்டிக்கு செல்ல்லாமா? ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு பேசலாம்” என்கிறான். சிறிது யோசனைக்கு பின் “ஓ, தாராளமா” என்கிறாள், செலின்.
தொடர்ந்து பேசும் அவர்களின் உரையாடல்களின் மூலமாக செலின், ஜேசியின் கள்ளமில்லா மனதையும், வெளிப்படையான பேச்சையும் ரசிக்கிறாள். ஒருகட்டத்தில் ஜேசி இறங்க வேண்டிய வியன்னா என்கிற நகரம் வந்திவிடவே, அவள் சொல்கிறாள். நீ இங்கதானே இறங்கனும், என்கிறாள். ஆம், என்றபடி தனது மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வரும் அவன், அவளை பார்த்து உறுதியாக கேட்கிறான், ”நீ ஏன் என்னோடு இங்கேயே இறங்ககூடாது” “என்ன?” “நாம் இருவரும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம், நாளை சூரிய உதயத்திற்கு முன் உன்னை உனக்கான விமானத்தில் கொண்டுவந்து சேர்ப்பேன், நீ என்னை தாராளமாக நம்பலாம்” “ம்ம்ம்....” “.......................” “ஓகே, போகலாம்” அவ்வளவுதான், ஒருவர் மீது ஒருவரின் நம்பிக்கையை இருவரும் உணரும் அழகான காட்சி அது.
நான் சொன்ன அந்த முதல் காட்சி
இங்கிருந்து ஆரம்பிப்பார்கள், பேசுவதற்கு, ரயில் நிலையத்தில், பாலத்தில், கல்லறையில், உணவகத்தில், பாரில், கேளிக்கை விடுதியில் என் இன்னும் எங்கெல்லாமோ பேசுவார்கள். நட்பு, காதல், குடும்பம், விருப்பம், வேடிக்கை, விளையட்டு, உலகமயமாக்கல், கம்யூனிசம், போர், வியாபரம், கேளிக்கை இன்னும் என்னவெல்லாமோ பேசுவார்கள். வளர்ந்துகொண்டே போவது அவர்களின் உரையாடல் மட்டுமல்ல.
இதனிடையே அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நேர்த்தியாக பிச்சை கேட்கும் அந்த ரோட்டோர கவிஞன். என எல்லாமே வெகு அழகு. வெறும் இரண்டு கதாப்பாத்திரங்கள், திகட்டாத காதல். போரடிக்காத திரைகதை. தெளிவான வசனங்கள். இவைதான் இந்த படத்தின் வெற்றி.
சொல்லனும்னா முழுபடத்தையும் பத்தி ஏதாவது சொல்லிகொண்டே தான் இருப்பேன். ஆனால் பாருங்கள், பார்த்து விட்டு சொல்லுங்கள். மேலும் இந்த பட்த்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு காட்சிகளை கீழே லின்க் கொடுத்திருக்கிறேன். இந்த காட்சி ஏதாவது தமிழ் படங்களை நியாபகப்படுத்தினால் நான் பொருப்பல்ல.
எனக்கு ரொம்பவே பிடித்த வாலி சீன் இங்கே தி பெஸ்ட், சீன் (வாலி) அந்த ஆடியோ கேட்கும் சீன் இங்கே கண்கள் இரண்டால்...... என்னை கட்டி இழுத்தாய்....
படத்தின் ட்ரெய்லர் காட்சி
அவளோடு பேசிகொண்டிருக்கையில் அவள் முடி கலைந்து முகத்தில் விழும்போது அதை எடுத்துவிட அவன் முயல, அவள் அதைப்பார்த்துவிட, பிறகு சைகையால் முடி.... கலைந்திருக்கிறது என்று உணர்த்தும் இந்த இடம் ஒருகவிதை, விடியோவில் பார்க்க இந்த காட்சியின் 51 வது வினாடியில் பாருங்கள் அந்த கவிதையை
இருவரும் ஆறு மாதம் கழித்து சந்திக்கலாம் என்று பிரிந்தபின், அவர்களி நின்று பேசிய இடங்கள் ஒவ்வொன்றாக திரையில் வரும், காதலும் காதல்ர்களுமின்றி வெறுமையான அந்த இடத்தை ரம்மியமான இசையால் நிரப்பியிருப்பர்கள், அவசியம் பாருங்கள் இதுதான் கிளைமேக்ஸ், அவர்கள் பிரிந்தபின் வரும் இசையை கேளுங்கள்.
சமீபத்தில் இதுபோல உரையாடலை முன்னிருத்தி ஓரளவு வெற்றியும் பெற்ற படங்கள், தமிழில் அன்பேசிவம், ஹிந்தியில் JAB WE MET, இப்போது தமிழில் கண்டேன்காதலை என்று வந்திருக்கிறது. ஹிந்தியில் ரசிக்கமுடிந்த அளவிற்கு வசனங்களை தமிழில் ரசிக்கமுடியவில்லை என்பதே நிஜம். போரடிப்பதுபோல இருந்தது. ஆனால் இந்தபடம் முழுக்க முழுக்கவே உரையாடல்கள்தான், எப்படி போரடிக்காமல் எடுத்தார்களோ? டைரக்டருக்கே வெளிச்சம்.
1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பட்த்தின் அடுத்த பாகம், 2005ஆ ஆண்டு BEFORE SUNSET என்ற பெயரில் வெளிவந்தது, அந்த படத்தையும் பார்த்திருக்கிறேன், வெறும் என்பதே நிமிடங்கள்தான், மிக அருமையான படம். முதல் பாகத்தை பார்த்த அனுபவத்தினால் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, என்னிடம் இருக்கும் பிரதியில் சப் டைட்டிலுக்கு வழி இல்லாததால், எனவே வசனங்கள் பற்றி தெளிவாக எதுவும் எழுத முடியவில்லை. ஆனால் முதல் பாகத்தை தூக்கி சாப்பிடும்விதமாக பெரிய ஓப்பனிங்கையும் வசூலையும் பெற்றது, இரண்டம் பாகம்.
BEFORE SUNSET படத்தின் விமர்சனத்தை எழுத, கேபிள்சங்கர், ஹாலிவுட் பாலா மற்றும் வண்ணத்துபூச்சியார் இவர்களை உரிமையோடு அழைக்கிறேன். ஏன்னா எனக்கு வசங்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களில் யார் எழுதுவது என்பதை நீங்களே பேசி முடிவு செய்துகொள்ளுங்கள், ஆனால் யாரவது ஒருவர் எழுதித்தான் ஆகவேண்டும். இங்கே ஒரு ஸ்மைலியை போட்டு உங்களிடம் எனக்கிருக்கும் உரிமையை தரமிறக்குவதாயில்லை. ஆக யாரவது எழுதுங்கள்.









