வெகு சமீபத்தில் என் மனதை பிசைந்த இரு நிகழ்வுகள்.
*************************************************************
வழக்கம்போல அலுவலை முடித்துவிட்டு இரவு 10.30க்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு என் வண்டியை எடுத்து சென்றிருந்த நண்பனுக்காக காத்துக்கொண்டிருந்தேன். குளிருக்கு இதமாக ப்ளாக் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது, ஏதோ போட்டி போட்டுக்கொண்டு வந்தபடியாக இருந்த இரண்டு வண்டிகளில் ஒன்று கீழேயும் இன்னொன்று அதிவேகமாக கடந்தும் போயிற்று. சில வினாடிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலையிலிருந்து சற்று விலகி சன்னமாக அசைவுகளோடு அவன் கிடந்தான். நெரிசல் இல்லாத இரவு நேரம், எனக்கு ரத்தத்தை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வரும். சுற்றி முற்றி பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அவனருகே சென்றபொது மெல்ல புரண்டு படுக்கிறான்.
தெருவிளக்கு ஒளியில் அவன் காது, மூக்குகளிலிருந்து ரத்தம் கசிவதை பார்க்க முடிந்தது. கடவுளே! என்றபடி 108 க்கு போன் செய்துவிட்டு நானும் இன்னொரு நண்பரும் இன்ன சிலரும் அவ்விடம் சேர்ந்தோம். ஈனமான முனகலுடன் மெல்ல உடம்பை அசைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். வேறு சில தனியார் மருத்துவமனைக்கான ஆம்புலன்ஸ்களுக்கும் போன் செய்தோம். விபத்து என்றாலே விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் பிரைவேட் ஆம்புலன்ஸ்களும் அன்றைக்கு காலை வாறியது. கண் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் செத்துக்கொண்டிருப்பது போல இருந்தது. பத்து நிமிடம் காத்திருந்தோம்.
அதற்கு மேல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் உயிர் தப்பிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதால் இரண்டு சக்கர வாகனத்திலேயே அவனை அழைத்துச் செல்வதென முடிவு செய்தபின் அவனை தூக்கி ஒரு வாகனத்திலே அமரச்செய்யும்போது, அவன் குருதி கிட்டதட்ட நனைத்திருந்தது என்னை. வாகனத்தின் பின்னால் நான் அமர்ந்தபடி ஒருமாதிரியாக அவனை எனக்கும் ஓட்டுனருக்கும் இடையில் இருக்கச்செய்யும்போது வந்து சேர்ந்தது 108. மீண்டும் அவனை இறக்கி ஆம்புலன்ஸில் ஏற்றும்போது கிட்டத்தட்ட இறந்திருந்தான். இத்தனை இடத்திலும் அவனை அவன் என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. எவ்வளவு பரிதாபமான சூழ்நிலையிலும் அவன்மீது ஒரு தனியாத கோபத்தை உண்டாக்குமளவிற்கு குடித்திருந்தான்.
எது எப்படியோ, ஒரு மனிதனின் கடைசி நிமிடங்களை வெகு அருகாமையில் பார்த்த அந்த நிமிடம் வாழ்க்கையில் எல்லா பிடிப்புகளும் ஒரு நிமிடம் தளர்ந்துதான் போனது. குடித்தோமோ இல்லையோ விபத்து ஒரு மனிதனின் வாழ்க்கையை நொடியில் திருப்பிப்போட்டுவிடுகிறது. வீட்டிற்கு வந்து கைகளிலிருந்த ரத்தகரையை கழுவிவிட்டு படுத்தேன். ஒருமாதிரியாக போயிருந்த்தது, கைகளில்சரி ஆனால் மனது அப்படியில்லையே!
அந்த இரவும் இந்த இரவும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து பா.ராவின் அலகிலா விளையாட்டு படித்துக்கொண்டிருந்தேன். எதேட்சையாக எழுந்த அம்மா “இந்த பிளாக் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்ச, இப்படி கண்ட நேரத்துக்கும் புத்தகமும், கம்ப்யூட்டருமா இருக்க என்றபடி அவர்களுக்கு தெரிந்த பதிவர்களின் பெயர்களாய் சொல்லி திட்டியபடி கடந்து போனார்கள். பாவம் அவர்களுக்கு அவர்களின் மகனின் தூக்கம் பெரிது.
***************************************************************************
வெள்ளி கிழமை, மாலை 5 மணி. வங்கியில் எனக்கான காசோலை புத்தகத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமையா? வேறேதும் விஷேசமா? தெரியவில்லை. வங்கியில் ஐயர்களைக் கொண்டு பூசை செய்துகொண்டிருந்தார்கள். பூசை முடித்துவந்ததும் காசோலை கொடுப்பதாக சொல்லிச் சென்ற காசாளருக்கு காத்திருக்கும்போது கவனித்தேன். எனக்கு பின்னாலிருந்து வந்த விசும்பலை. உடனடியாக திரும்பிபார்த்தால் சங்கடமாக உணர்வார்களோ என்றெண்ணி சற்று தாமதித்து திரும்பிப்பார்த்தேன். என் பெரியம்மா வயதையொத்த பெண்மணி கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருந்தார்.
என்னம்மா பணம் எடுக்க வந்திருக்கிங்களா? என்றேன் பொதுவாய்.
அவர்களைத்தான் கேட்க்கிறேன் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பார்வையுடன் மெல்ல பேச ஆரம்பித்தார்கள் “ ஆமாம், தம்பி”
ஏன் அழறிங்க என்று கேட்கத்தோணியது.
“ரெண்டு வருஷமா சேர்த்து வச்சி ஒரு மூவாயிரத்தை போட்டு வச்சிருந்தேன், இப்போ வட்டி போட்டு மூவாயிரத்தி ஐநூறு இருக்கு, ஒரு நூறு ரூபாய எடுத்துட்டு மிச்சத்த போட்டு வச்சா இன்னும் ரெண்டு வருஷத்துல இன்னியொரு ஐநூறுக்கு கூடவோ குறையவோ கிடைக்கும்ல” என்றவர் சிறிய மெள்னதிற்கு பிறகு “ரெண்டு வருஷத்துக்குள்ள என்ன செத்தா போயிடப்போறோம்” என்றார்.
“ஆமாம், அதனால என்ன?”
“ஒரு ரெண்டுவருஷம் கழிச்சு இந்த பணத்தை மவனுக்கு கொடுத்தா எதாவது செய்து பொழச்சிக்குவான், ஆனா மவளுகளுக்கு மட்டும் கொடுக்கமாட்டேன், தம்பி”
“ஏன் அப்படி?”
“எப்போ பாரு, நீதான் மில்லுல வேலை செய்றல்ல, பெரிய இன்ஜினியர்கிட்ட சொல்லி எதாவது வாங்கிக்கொடுன்னு கேட்டுகிட்டே இருப்பாளுக”, “போனமாசம் கூட இப்படித்தான் தம்பி, ஒருவருஷமா சீட்டு போட்டு சேர்த்து வச்ச ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய எடுத்து கொடுத்தேன், அதையும் வாங்கிட்டு இப்போ கேட்டதுக்கு, இப்பதானடி கொடுத்தேன்னு சொன்னா, ஆமா என்னத்த கொடுத்த, நீ கொடுத்தத வச்சுத்தான் ரெண்டு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருகேன்னு எளக்காரம் பண்ணுறா” என்றார்.
என்றவர் தொடர்ந்து “ 27 வருஷமா இந்த மில்லுல வேலை செய்யுறேன், பஞ்சு குப்பைகளை கூட்டி பெருக்கனும், வாரம் எம்பத்தியஞ்சி ரூபா சம்பளம், எனக்கு சோத்துக்கு போக கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்சி சீட்டு போட்டு, இப்படி பேங்குல ஆர்.டி போட்டு சேர்த்து ஏதோ என்னால முடிஞ்சத நானும் செஞ்சிட்டுதான் தம்பி இருக்கேன்”
“இருந்தும் என்னை இங்க வாங்கிட்டு வா அங்க வாங்கிட்டு வான்னு எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்குறா”
“போயிச்சேரலாம்ன்னா அந்த எளவும் வந்து சேர மாட்டேங்குதுன்னு சொன்னபடி மறுபடியும் விசும்ப தொடங்கினார்.
எனக்கு அவரை, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக அவர்களை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்த்தபடியாக தெரியவில்லை. ஒருவேளை என்னிடம் இறக்கி வைத்ததில் அவர்களின் சுமை குறைந்திருக்கலாம்.
எனக்கு, மாதம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பாதிச்சாலும் கடைசி வாரத்துல அஞ்சு பத்துன்னு தேடிக்கிட்டிருக்கிற எனக்கு வாரம் ரூ.85-ல் பொழப்பு நடத்தி பொண்ணுக்கு கல்யாணமும் செஞ்சி வச்சி இன்னமும் தன்னால முடிஞ்ச பணத்தை தன் பிள்ளைகளின் எதிகாலத்திற்கென சேர்த்து வச்சிகிட்டிருக்கிற அந்த பெரியம்மா, அதிசயமா தெரிஞ்சாங்க. அதிலும் “ரெண்டு வருஷத்துக்குள்ள என்ன செத்தா போயிடப்போறோம்” என்று அவர்கள் சொல்லும்போது வாழ்கையின் மீதான அசாத்திய நம்பிக்கையை அவரின் குரல் வழியாக உணர முடிந்தது.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)