கிறுக்கல்கள் 51



என் சன்னல்களை
திறந்து வைத்துவிட்டு,
உன்னைக் காணாத
ஒரு நீண்ட பகலின்
நடுவில் அமர்ந்திருக்கிறேன்,
எப்பொழுதும் போல,
ஏமாற்றத்தோடு.

மெல்ல மெல்ல
உருமாறிக்கொண்டிருக்கிறது, பகல்.
ஹோவென ஓடித்திரியும் காற்றில்
அறைந்து சாத்தப்படுகிறது சன்னல்கள்.
வேகமாய்க் கூடடைகின்றன,
பனைமரக் கிளிகள்.
சட்டெனப் பிடிக்கிறது மழை.
ஒவ்வொரு துளியையும்
வறண்ட நாவினால்
உறிஞ்சிக் குடித்த மண்,
பின் மணக்கிறது,
மண்ணோடு சுவரும்,
சுவர்கள் சூழ்ந்த தெருவும்.
பின் நானும்.

மழை நின்ற பொழுதுகளின் ஈரம்,
பகல் தாண்டி, மண் தாண்டி,
சுவரையும் தெருவையும் தாண்டி
மனிதர்களுக்குள்ளும்,
ஈரம் விதைத்துப்போகிறது.
ஏன், மழைக்குப் பிந்தைய
உரையாடல்கள்கூட
உனக்குப் பிந்தைய
என் வாழ்க்கையைப் போல,
குளிர்மையேறியே கிடக்கின்றன.

திறந்து வைத்த சாளரம் வழியாய்,
மழையைப் பொழிகிறாய் நீ,
மழையாய்ப் பொழிகிறாய் நீ.
மழையைப்போலே,
வருவதும் போவதும்தான்
வாழ்க்கையென
நீ வந்துபோவதிலேயே
சொல்லிக்கொடுக்கிறாய்.
நீ சொல்லிக்கொடுத்தபடி
எப்பொழுதும்போல,
உனைக் காணாத ஏக்கத்தை
மழை கண்டு போக்கிக்கொண்டிருக்கிறேன்.


Post Comment

23 பின்னூட்டம்:

Admin said...

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

shri Prajna said...

"மழையைப்போலே,
வருவதும் போவதும்தான்
வாழ்க்கையென
நீ வந்துபோவதிலேயே
சொல்லிக்கொடுக்கிறாய்"

மழையின் ஈரம் இதயம் நனைந்து போகிறது முரளி..

”மழைக்குப் நின்ற பொழுதுகளின் ஈரம்”
என்பது ”மழை நின்ற பொழுதுகளின் ஈரம்”
என்று வந்திருக்கவேண்டுமா?

’வறண்ட நாவினால்
உறிஞ்சிக் குடித்த மண்,
பின் மணக்கிறது,
மண்ணோடு சுவரும்,
சுவர்கள் சூழ்ந்த தெருவும்.
பின் நானும்.’’
கவிதை படித்தபின் மனமெல்லாம்...

கனிமொழி said...

:)...

leonilebin said...

இதயமதை ஈரமாக்கும்
படித்து புரிந்ததும் மழலையாய் மனம்
மழைத்துளியில் நனைந்த மகிழ்ச்சி...

இதுபோல் தொடர....

வாழ்த்துதல்களுடன்

லெபின்.

ராகவன் said...

அன்பு முரளி,

தளவார்ப்பு அழகாய் இருக்கு... மழை பெய்யும் அல்லது பெய்த ஜன்னலும், கோப்பை தேனீரோ அல்லது காஃபியோ... இருக்கும் அந்த ஃபிரேம் அழகா இருக்கு...

கவிதை பற்றி தனி மடலில் எழுதியிருக்கேன்... வாசித்து பதில் எழுது.


அன்புடன்
ராகவன்

சுசி said...

:))

Ravikumar Tirupur said...

நீங்கள் எழுதியதாக படிப்பதனால் எனக்கு இந்த கவிதை பிடித்திருக்கிறது!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றீ தேன்கூடு :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஸ்ரீ
நெசமாத்தான் சொல்றிங்களா? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி
ம்க்கும் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@லெபின்
சார், முதல்முறையா பதிவுபக்கம் வந்திருகிங்க, வாங்க. நானும் உங்க ஃபேஸ்புக் ஸ்டேடஸை தொடர்ந்து கவனிச்சிட்டுதான் வரேன்,நீங்க எழுதலாமே சார்.
தேங்க்யூ சார்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராகவன்

//தளவார்ப்பு அழகாய் இருக்கு... மழை பெய்யும் அல்லது பெய்த ஜன்னலும், கோப்பை தேனீரோ அல்லது காஃபியோ... இருக்கும் அந்த ஃபிரேம் அழகா இருக்கு...//

படம் நல்லாயிருக்கு கவிதை நல்லாயில்லைன்னு எவ்ளோ நாசூக்க சொல்றிங்க? என்னா ஒரு வில்லத்தனம்? :-))

//கவிதை பற்றி தனி மடலில் எழுதியிருக்கேன்... வாசித்து பதில் எழுது.// அவசியம் எழுதுறேன் குரு. நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டுவிட்டது, உங்கள் மடல்....

முரளிகுமார் பத்மநாபன் said...

@சுசி
தேங்க்ஸ் மேம்

முரளிகுமார் பத்மநாபன் said...

@ரவிகுமார்
யோவ் இதுக்கு அசிங்கமா திட்டியிருக்கலாம். :-))

ஷஹி said...

Amazing...சிலுசிலுன்னு வாவ்...அவள மழையாவும், மழைய கவிதையாவும் வடிச்சு தீத்துட்டீங்க முரளி..இதுக்கு மேலயும் மழையையும் அவளையும் எழுத முடியுமா? ஒண்ணும் பாக்கி வக்கல போல?..நீங்க எழுதுனதுல பச்சக்குனு மனசுல ஒட்டினதுல இது முதன்மையா இருக்கு..என்னமோ ரொம்பவே பிடிச்சிருக்கு முரளி..மென்சோகம் இழையோடினாலும், ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கை, ஆசை இழையோடுறது தான் இந்தக் கிறுக்கலோட ஸ்பெஷாலிட்டின்னு நினைக்கிறேன்..பூந்தூறலில் நனஞ்ச சந்தோஷத்துக்கு நன்றி..

Ravikumar Tirupur said...

அட என்னங்க நீங்க இப்படி சொல்லிப்போட்டீங்க! என்னுடைய கவிதை அறிவு அம்புட்டுதானுங்க. காதல் கவிதையை பீல் பண்ணி உணர ஒருமனநிலை வேண்டும்

Com Nandhu said...

நல்லா இருக்கு முரளி. நீங்க கவிஞரான்னு ஆச்சர்யமா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு.

KSGOA said...

கவிதை நல்லாயிருக்கு.பூங்கொத்து.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஷஹி
//இதுக்கு மேலயும் மழையையும் அவளையும் எழுத முடியுமா? ஒண்ணும் பாக்கி வக்கல போல?//

என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க? இன்னும் வண்டி வண்டியா இருக்கு மழை மனசுக்குள்ள,

//என்னமோ ரொம்பவே பிடிச்சிருக்கு முரளி..மென்சோகம் இழையோடினாலும், ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கை, ஆசை இழையோடுறது தான் இந்தக் கிறுக்கலோட ஸ்பெஷாலிட்டின்னு நினைக்கிறேன்..பூந்தூறலில் நனஞ்ச சந்தோஷத்துக்கு நன்றி..//

ரொம்ப தேங்க்ஸ்க்கா, இப்படியே உசுப்பேத்திக்கிட்டே இருங்க, எனக்கு ஒருவகையில் அது நல்லதுதான் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ரவிகுமார்
//காதல் கவிதையை பீல் பண்ணி உணர ஒருமனநிலை வேண்டும்//

அதெல்லாம் கவிதைக்குத்தான், நம்ம கிறுக்கலுக்கு அதெல்லாம் தெரியாது, கிடையாது. படிக்கனும் பிடிக்கனும், இல்ல பிடிக்காம் போகனும் அவ்ளோதான்

முரளிகுமார் பத்மநாபன் said...

@நந்தகோபால்
நந்து சார்? கவிஞரா? ஏன் சார் இந்த கொலவெறி? :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@KSGOA
நன்றி நண்பா! :-)

அம்பாளடியாள் said...

திறந்து வைத்த சாளரம் வழியாய்,
மழையைப் பொழிகிறாய் நீ,
மழையாய்ப் பொழிகிறாய் நீ.
மழையைப்போலே,
வருவதும் போவதும்தான்
வாழ்க்கையென
நீ வந்துபோவதிலேயே
சொல்லிக்கொடுக்கிறாய்.
நீ சொல்லிக்கொடுத்தபடி
எப்பொழுதும்போல,
உனைக் காணாத ஏக்கத்தை
மழை கண்டு போக்கிக்கொண்டிருக்கிறேன்.

மிகவும் சிறப்பான வரிகள் .வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .............