எது உலக சினிமா?, அப்படி ஒன்றுமே இல்லை. இந்தியாவில் எடுக்கப்படும் எந்தப்படமும் அர்ஜெண்டினாவிலோ, சிலியிலோ உலகப்படம்தானே என்ற வாதத்தை நானே அதிகம் கேட்டிருக்கிறேன். இல்லை, உலகப்படமென்று, படத்திற்கென்று ஒரு தரம் இருக்கிறது, அவை பட்டவர்த்தனமான உடலுறவு காட்சிகளும், வித்தியாசமான கோணங்களையும் பொருத்து அமைவதல்ல. எந்த ஒரு படம் உலகம் முழுமைக்குமாக எடுக்கப்படுகிறதோ, எந்த ஒரு படத்தை பல்வேறு நாட்டுப் பார்வையாளனும் ஒரே மனநிலையில் எதிர்கொள்கிறானோ, அல்லது ஒரே மாதிரியான பாதிப்பை அடைகிறானோ அந்தப் படம், உலகத் திரைப்படம்
அப்படி ஒரு திரைப்படம்தான் “தி இன்னோசன்ட் வாய்ஸ்”. இது ஒரு திரைப்படம், என்னை மிகவும் பாதித்த திரைப்படம். இந்தப் படம் நெடுக ரசனையான நிறைய காட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. கவிதை மாதிரியான காட்சிகள், இந்தக் காட்சிகள் முடிந்ததும் நிச்சயம் கண்களில் நீர் தளும்பும். சந்தோசம் அல்லது பெருஞ்சோகம் காரணமாய். அப்படி எனக்குப் பிடித்தமான காட்சிகளை அடைப்புக்குறிக்குள் எனக்குப் பிடித்த கவிதை என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை உங்களுக்குமாய் . . . . .
பெருகும் புல்லாங்குழல் இசையினூடே, கடுமையான மழையில் கைகளை தலைக்குப் பின்னால் கட்டியபடி நடக்கும் ஐந்து சிறுவர்கள், துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். (முதல் முறை இந்த இசையைக் கேட்பவர்கள் ஒருமுறையாவது ரீவைண்ட் செய்து மறுபடியும் கேட்கப்போவது உறுதி) அவர்களில் ஒருவனான சிறுவன் ச்சாவேவின் குரலில் தொடங்குகிறது படம். “எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, என் ஷூவிற்குள் கற்கள் புகுந்திருக்கின்றன, அவை என் கால்களை ரணமாக்குகிறது. இவர்கள் எங்களை எப்படியும் கொல்லத்தான் போகிறார்கள்”.
அவனது குரல் வழியாகவே கதை சொல்லப்படுகிறது, போர் தீவிரமானதுமே, அப்பா எங்கள் அனைவரையும் விட்டு ஓடிவிட்டார், எனக்கு குண்டா ஒரு அக்காவும், ஒரு குட்டி தம்பியும் இருக்காங்க, அப்போ அம்மா இனி நீதான் வீட்டிற்கு ஆம்பளைன்னு சொன்னாங்க. என் அக்காவுக்கு அது பிடிக்கலைன்னாலும் எனக்குப் பிடிச்சிருந்தது. அம்மா ரொம்ப சிரமத்தோட அருகிலுள்ள தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்து சம்பாதிக்கிறாங்க. இரவு நேரங்களில் திடீர் திடீரென போர் ஆரம்பமாகி விடும், துப்பாக்கிக் குண்டுகள் இடைவிடாது விழுந்துகொண்டேயிருக்கும். அம்மா சொன்னது போல, நாங்க கட்டிலுக்கு அடியில் படுத்துப்போம். தம்பி பயத்துல அழுதுட்டே இருப்பான். அதனால, எங்களுக்கு ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா தனியா இருக்க பயம். அம்மா இருக்கும்போது எங்களுக்கு போரே ஏதோ குறைந்துவிட்டது போல இருக்கும்.
சொந்த நாட்டிற்குள்ளேயே நடக்கும் இனக்கலவரம், ராணுவத்தினருக்கும் கொரில்லாக்களுக்கும் இடையே நடக்கும் போர். ராணுவத்தினருக்கு, கொரில்லா வீரர்களுக்கு உதவி செய்வதாய் இருக்கும் சந்தேகத்தின் பேரில் ஊர்மக்களின் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். பலன், ஊரில் ஒவ்வொரு தெருவிலும், பள்ளியிலும், வழிபாட்டுதலங்களிலும், கடைகளிலுமென மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் இருக்கின்றனர். பயம், ஒரு கரிய நிழலைப்போல அந்த ஊரையே ஆட்கொண்டிருக்கிறது.
இப்படி தினமும் போரின் நடுவில் அல்லாட வேண்டுமா என்ன? பேசாமல் பக்கத்து நாடுகளுக்கு சென்று விடலாமே? அகதிகள் முகாம் போல? என்கிறாள் ச்சாவாவின் பாட்டி. மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கும் தன் சகோதரன் திரும்ப வரும்போது தங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும். அவன்தான் தங்களது ஒரே நம்பிக்கை என்றும் சொல்கிறாள் ச்சாவாவின் அம்மா. வேறு வழியில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், சாவிற்கும் இடையே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தபடியே அம்மா தைத்துத் தரும் துணிகளை கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்பதும், பணம் பெற்று வருவதையும் தினமும் செய்து வருகிறான். நகரில் ஒரு பேருந்து ஓட்டுனரிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவர், பேருந்தில் இடங்களின் பெயரை கூவி அழைக்க எனக்கு உதவியாய் இருந்தால் உனக்கு பணம் தருகிறேன் என்கிறார். ச்சாவா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் தான் வேலை செய்து சம்பாதித்ததைப் பற்றி பெருமையாய்ச் சொல்கிறான். அவனது செய்கையில் பெருமிதமடையும் அவள், இருட்டுவதற்கு முன் வந்துவிட வேண்டும். மேலும், நீ பத்திரமாக இருப்பாயேயானால், செய் என்கிறாள். (எனக்குப் பிடித்த ஒரு கவிதை)
ஒருநாள் பள்ளியில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும்போது ராணுவத்தினர் வருகின்றனர். சில மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு அழைத்து செல்கின்றனர். அனைவரும் 12 வயதினை அடைந்தவர்கள். கதறி அழும் அவர்களை வேனில் அடைத்து செல்கின்றனர். வீட்டிற்கு வந்து ’என் நண்பன் டிமோவை இன்று இழுத்துப்போய் விட்டார்கள்’ என்று சொல்லி அழுகிறான். (சிறுவர்களுக்கு எப்போது 12 வயது ஆகிறதோ அப்போது ராணுவத்தினர் அவர்களை ராணுவ பயிற்சிக்கு என்கிற பெயரில் வலிய அழைத்துச் சென்று விடுகின்றனர். இனியெப்போதும் அவர்கள் திரும்ப வரப்போவதில்லை. தங்கள் இனத்தினருக்கு எதிராக போராட அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும்). என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறாள், அம்மா. தன் சகோதரன் வந்துவிட்டால் இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கிடைத்துவிடுமென நினைக்கிறாள்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் சிறுமியை விரும்புகிறான். அவளோடு மிகவும் நட்புடன் பழகுகிறான். ஒரு நாள் அவளை தங்களோடு விளையாட அழைத்துச் செல்கிறான். காகிதத்தில் செய்த பட்டங்களில் மெழுகுகளை ஏற்றி பறக்கவிடுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட ஆன்ச்சோ என்பவனும் அவர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். (எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை) இருட்டுகிறது. விளையாட்டில் கவனமாயிருந்த அவர்கள் நேரத்தை தவறவிடுகின்றனர். ராணுவத்தினர் வருகின்றனர். அங்கிருந்து தப்பியோடும் ச்சாவா, அவளை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வருகிறான். மிகுந்த கவலையோடும், கோபத்தோடும் காத்திருக்கும் கெல்லா, இருட்டுவதற்குள் வீடு வரவேண்டும் என்பதை மீறிய ச்சாவாவை அடிக்கிறாள். பின் இறுக்கமாக இருக்கும் அம்மாவை குழந்தைகள் மகிழ்விக்கின்றனர். (எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை)
அப்போது பீட்டோ (அம்மாவின் சகோதரன்) வருகிறான். அனைவரும் மகிழ்ச்சியோடிருக்கின்றனர். குட்டிப்பையன் வீட்டிற்கு வரும் எந்த ஒருவரையும் அப்பா என்று அழைக்கிறான். ச்சாவா, தன் மாமாவிடம் அம்மா தைத்த துணிகளை விற்றுவருவதைப் பற்றியும், பேருந்தில் வேலை செய்வது பற்றியும் பெருமையாக சொல்லிக்கொள்கிறான். திடுமென அருகில் குண்டு வெடிக்க, மீண்டும் அனைவரும் கட்டிலுக்கு அடியில் தஞ்சம் அடைகின்றனர். அருகிலுள்ள வீட்டில் அலறல் சத்தம் கேட்கிறது. பீட்டோ தன்னுடைய கிதார் பெட்டியில் ஒளித்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கே போகிறான். அம்மா தடுக்க தடுக்க ச்சாவாவும் பின்னாலேயே ஓடுகிறான். ஒரு பாட்டியும் பேத்தியும் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் சிறுமியின் வயிற்றில் குண்டு பாய்ந்திருக்கிறது. முதலுதவி செய்கின்றனர். அடிபட்ட இடத்தில் கைகளால் அழுத்திப் பிடித்தபடியிருக்கும் ச்சாவாவின் கண்முன்னேயே அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறாள். மெல்ல விடிகிறது.
பீட்டோ படிக்க செல்லவில்லை, கொரில்லா யுத்தத்திற்கான பயிற்சியில்தான் இருந்திருக்கிறான் என்பதை அறிகிறாள் கெல்லா. அவன் நமது விடுதலைக்கு நாம் போராடியே ஆக வேண்டும் என்கிறான். மேலும், ச்சாவாவிற்கும் 12 வயது வரும்போது பயிற்சி அளிக்க இருப்பதாகவும் சொல்கிறான். அவன் ரொம்ப சின்னப் பையன். அவன் வேண்டாம் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்கிறேன், என்கிறாள் கெல்லா. ச்சாவா அனைத்தையும் கேட்டபடியே படுத்திருக்கிறான். போகும்போது பீட்டோ, புரட்சிப்பாடல் அடங்கிய ஒரு ரேடியோவை கொடுத்துச் செல்கிறான். ச்சாவா எப்போதும் அந்த பாடலைக் கேட்டபடியே இருக்கிறான். அது தடை செய்யப்பட்ட பாடல். ஒருநாள் வீதியில் அந்த பாடலை கேட்டபடியே வரும் அவனை சர்ச்சின் ஃபாதர் எச்சரிக்கிறார். இதை ராணுவத்தினர் கேட்டால் உன்னை மன்னிக்கமாட்டார்கள் என்கிறார். ஆனால், விடாப்பிடியாக இன்னும் சப்தமாக வைத்துக்கொண்டு நடக்கிறான். ராணுவத்தினர் ச்சாவாவை கவனிக்கின்றனர். ஃபாதரும் கவனிக்கிறார். உடனே சர்ச்சின் ஒலிபெருக்கியில் அதிக சப்தத்துடன் பாடலை போடுகிறார். ராணுவத்தினரின் பார்வை அங்கே திரும்புகிறது. ச்சாவா படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு முறை கொரில்லாக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நட்த்துகின்றனர். தங்களுக்கு எதிராக மக்கள் பலமடைவதை உணரும் ராணுவத்தினர் பள்ளியையும், சர்ச்சையும் மொத்தமாய் அழிக்கின்றனர். மேலும் பல்முனை தாக்குதல் மூலமாக ஊரையே அழிக்கவும் நினைக்கின்றனர்.
வேறு வழியின்றி கெல்லா, அவள் அம்மா சொன்னபடியே குழந்தைகளுடன் அருகிலுள்ள ஊருக்கு செல்கிறாள். குழந்தைகளும் பாட்டியோடு இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். பீட்டோவின் மூலம் ச்சாவாவிற்கு ஒரு செய்தி வருகிறது. ”நாளை ராணுவத்திலிருந்து சிறுவர்களை பிடிக்க வருகின்றனர், அனைவரும் பத்திரம்” என்று. ச்சாவா சிறுவர்களை திரட்டி துண்டு சீட்டில் எழுதி அனைவருக்கும் வினியோகிக்கிறான். வீட்டில் மேலே கூரையில் பதுங்கி தப்பிக்கின்றனர், பலரும். அனைவரும் ச்சாவாவை பாராட்டுகின்றனர். இதற்கிடையில், தனது பிறந்த நாளுக்கு வந்த தோழிக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வரும் ச்சாவா, அவளது வீடு முற்றிலுமாக அழிந்து போயிருப்பதைப் பார்க்கிறான். அவளது பாவாடையில் ஒரு சிறு பகுதி மட்டுமே அவனுக்குக் கிடைக்கிறது. விரக்தியடையும் அவன் தன் சகாக்களுடன் தனது மாமாவிடம் போக முடிவெடுக்கிறான்.
இரவில் அனைவரும் உறங்கியபின்னர் வேண்டிய துணிகளுடன் வெளியேறுகிறான். ஐந்து சிறுவர்கள் பீட்டோ சொன்ன இடத்திற்கு வருகின்றனர். அங்கிருந்து ஒரு கொரில்லாக்களின் தளவாடத்திற்கு வருகின்றனர். அங்கு ஏற்கனவே வந்திருக்கும் தனது நண்பர்களைப் பார்த்து குதூகலமடைகின்றனர். வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் உறங்குகின்றனர். ஆனால், அவர்களைப் பின்தொடர்ந்து வரும் ராணுவத்தினர் அவர்களைக் கண்டடைகின்றனர். மீண்டும் சண்டை துவங்குகிறது. அதில் வெல்லும் ராணுவத்தினர் சிறுவர்களை கைது செய்கின்றனர்.
அங்கே வீட்டில் கெல்லாவின் அம்மா, ராணுவத்தினர் நெருங்கி விட்டனர். இந்த ஊரையும் மொத்தமாக அழிக்க முடிவெடுத்துவிட்டனர். நாம் உடனடியாக இங்கிருந்து புறப்பட வேண்டும். பிறப்பு சான்றிதழ்களை மறக்காமல் எடுத்துக்கொள், அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்கிறாள். அவசர அவசரமாக புறப்படும் அவர்களுக்கு ச்சாவா இல்லாதது அப்போதுதான் தெரிகிறது. ஊரே கிளம்பி வெளியேறுகிறது. வழியில் தென்படும் ராணுவத்திரையெல்லாம் சபித்தபடியே நடக்கின்றனர். கெல்லா ’ச்சாவா, ச்சாவா’ என கத்திக்கொண்டு அவனைத் தேடியபடியே மீண்டும் ஊருக்குள் வருகிறாள்.
படம் மீண்டும் முதல் காட்சிக்கு வருகிறது. பெருகும் புல்லாங்குழல் இசையினூடே கடுமையான மழையில் கைகளைத் தலைக்கு பின்னால் கட்டியபடி நடக்கும் ஐந்து சிறுவர்கள், துப்பாக்கி முனையில் அழைத்து செல்லப்படுகின்றனர். (எனக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை) அவர்கள் செல்லும் வழியெங்கும் பிணங்கள், சிறுவர்கள், வீரர்கள், ஒருபுறம் மனநலம் குன்றிய ஆன்ச்சோவும் கூட. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒவ்வொரு சிறுவர்களாக பிடறியில் சுட்டுக்கொல்கின்றனர். பிடித்து செல்லப்பட்ட சிறுவர்களை மீட்க வரும் கொரில்லாக்கள் மீண்டும் சண்டையிடுகின்றனர். அதில் ச்சாவாவும் இன்னொரு சிறுவனும் தப்பிக்கின்றனர். அங்கிருந்து தப்பியோடி வீட்டிற்கு வருகிறான். ஆனால் வீடு முற்றிலுமாய் எரிந்து கிடக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகிறான். ச்சாவாவை விட்டு செல்ல மனமில்லாமல் கெல்லாவும் தேடி மீண்டும் அங்கு வருகிறாள். இருவரும் சந்திக்கின்றனர், அகதிகள் முகாமிலிருந்து ச்சாவாவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறாள், கெல்லா.
எனக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை, ஆனால் நான் இங்கிருந்தால் நிச்சயம் என்னை கொன்று விடுவார்கள். ஆனா நான் திரும்பி வருவேன். என் தம்பிக்கு 12 வயது ஆவதற்குள் இங்கு வந்து அவனை அனுப்பி வைப்பேன் என என் அம்மாவிற்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். இது என் தோழி கிருஸ்டினா மரியா, மற்றும் என் நண்பர்கள் பிடோ, ச்சேலே இவர்களுடைய கதையும்தான். ஆனால், இதைச் சொல்ல நான் மட்டும்தான் இருக்கிறேன். இது அவர்களுக்காகவும் தான்....... என்று ச்சாவாவின் குரல் ஒலிக்கிறது, கார் ஓட்டுவதுபோல கைகளை வைத்துக்கொண்டு கூரைகளின் மேல் ஓடிக்கொண்டிருக்கிறான் ச்சாவா......
சல்வதோர் சிவில் வார் என்ற இந்த பதிமூன்று வருட போரின் கொடூரமான நினைவுகளும், 75000 உயிரிழப்பும், 30,000 பேர் அகதிகளாக நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்த முகவரியற்ற மனிதர்களும் தான் இந்தத் திரைப்படம். கடைசிவரை இந்தக் கதை எங்கு நடக்கிறது என்று எழுத வேண்டியது அவசியம் இல்லை. ஏனெனில், இது எங்கு நடந்தாலும் விளைவுகள் ஒன்றுதான். நமக்கு 30 மைல் தொலைவிலேயே இந்த கொடுமைகள் அறிமுகமென்பதால், மனம் தலைகுனிந்து அறுந்து தொங்குகிறது. இந்த திரைப்படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் வருகிற யாராவது ஒருவர், உங்களுக்கு தெரிந்த ஒருவரை நினைவுபடுத்தலாம். அவர் இது போன்ற ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துமிருக்கலாம். படம் பார்த்து முடிக்கும்போது எழுத்தாளர் அம்பை எழுதிய ஒரு சிறுகதையின் கடைசி பத்தி நினைவில் வந்து தொலைக்கிறது. ஒருவேளை ரத்தம் குழைந்த மண்ணில் மண்டியிட்டு தன் குழந்தையைப் பற்றி அழும் அந்த தாய் தானோ இவள்? சூரியனைப்பார்த்து அது என்னம்மான்னு கேட்கும் அந்த சிறுவன் தான் ச்சாவாவோ?